தருமபுரி | ஊரக வேலை நிலுவை ஊதியத்தை வட்டியுடன் வழங்கக் கோரிக்கை - விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரதாபன், ‘‘தருமபுரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு போதிய அளவில் இல்லை. இதனால், கிராமப்புற கூலித் தொழிலாளர்களுக்கு வேளாண் சார்ந்த பணிகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கிடைத்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் பணியாற்றினர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், தருமபுரி மாவட்ட கிராமப்புற தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நிலுவை ஊதியத்தை சட்ட விதிகளின்படி 0.05 சதவீத வட்டியுடன் விரைந்து வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE