“உதயநிதி பேச்சால் இண்டியா கூட்டணி சிதறும்” - ஹெச்.ராஜா கருத்து

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: “உதயநிதி பேச்சால் ‘இண்டியா’ கூட்டணி சிதறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஆதிதிராவிடர்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கியது. அதில் ரூ.16,442 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு ரூ.5,976 கோடிதான் செலவு செய்துள்ளது. மீதிப் பணத்தை வேறு திட்டங்களுக்கு மாற்றியதா அல்லது செலவழிக்கவில்லையா என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் இலவச டிவி திட்டத்துக்கே ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய நிதியைதான் பயன்படுத்தினர்.

சனாதனம் பற்றி தெரியாதவர்கள் தவறாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதைப் பற்றி தெரிந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸில் கரண் சிங், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனாவில் உத்தவ் தாக்கரே போன்றவர்களே கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி பேச்சால் ’இண்டியா’ கூட்டணி சிதறும். தமிழகத்தில் காவல் துறையை வைத்து பாஜகவை மிரட்ட பார்க்கின்றனர். இனி அப்படி மிரட்ட முடியாது.

உதயநிதியை எப்படி சாமியாருக்கு தெரியும். சாமியார் பற்றி கூறுவதே பொய். இந்தியாவின் பெயரே பாரத் தான். அதனால், பாரத் என பெயர் மாற்றுவதில் சிரமம் இல்லை. உதயநிதி மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவுள்ளோம். நான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பேன்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE