பல்லடம் கொலை வழக்கு: தேடப்பட்ட இருவர் போலீஸில் சரண்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நால்வர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமான நபர்கள் இருவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும் போலீஸில் சரண் அடைந்தனர்.

தேடப்பட்டுவந்த வெங்கடேஷின் சகோதரர் ராஜ்குமார், முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு போலீஸில் சரணடைந்தனர். அவர்களை மாவட்டப் போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்த மோகன்ராஜ் (49), அவரது சகோதரர் செந்தில்குமார் (46), தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரை, கடந்த 4-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து(24) என்பவரை, குண்டடம் அருகே போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், தேடப்பட்டுவந்த திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷின் (27) சகோதரர் ராஜ்குமார், முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு போலீஸில் சரணடைந்தனர்.

முன்னதாக, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடல்களை பெறமாட்டோம் என போராட்டம் தொடர்ந்ததால், மோகன்ராஜின் அண்ணன் சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் அங்கு திரண்டிருந்த கட்சியினரிடம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, 4 பேரின் உடல்களை பெற்றுக்கொள்வதாக நேற்று மதியம் ஒப்புக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE