சனாதனம் பற்றி திறந்தவெளியில் விவாதிக்க தயாரா? - அமித் ஷாவுக்கு ஆ.ராசா சவால்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். ஆ.ராசா எம்பி பங்கேற்று கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆ. ராசா பேசியதாவது: கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்வராகி இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனை பிரதமர், குடியரசுத் தலைவர்களை உருவாக்கியுள்ளார். தமிழ்மொழியை காப்பாற்றினார். இந்தியாவின் இறையான்மையை காப்பாற்றினார். இந்தியாவில் சமதர்மத்தை வங்கிகளில் கொண்டு வந்தார். அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.

அவர் தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் புள்ளியாக தோன்றி, கோலமாக உயர்ந்து, இந்தியா முழுக்க கோலாச்சினார். இப்படிப்பட்ட மகத்தான தலைவர் தான் கருணாநிதி. புதுச்சேரிக்கு என்று பெரிய மகத்துவம் இருக்கிறது. அம்பேத்கர் தனது 23 வயதில் சாதியை பற்றி பெரிய ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை எழுதினார். அப்போது இந்து மதத்துக்கு எதிராக உள்ளது என்றும், சாதி எங்களுக்கு வேண்டும் என்றும் கூறி லண்டனில் இருந்த உச்ச நீதிமன்றம் சென்று அந்த புத்தகத்துக்கு தடை வாங்கினார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட முதல் புத்தகம் அம்பேத்கரின் புத்தகம் தான்.

அம்பேத்கரின் தடை செய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வந்து பாரதிதாசன் முழங்கப்பட்ட சமத்துவ மண் இந்த புதுச்சேரி. இந்து மதத்தால் எல்லா சாதியினருக்கும் இழிவு இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து தாண்டி வந்துள்ளோம். சனாதனம் என்றால் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். அமித் ஷா அல்லது பாஜகவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள், டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். ஒரு லட்சம் பேர் கூடட்டும். நீங்கள் சனாதனத்தைப் பற்றி பேசுங்கள்.

திமுக சார்பில் நானும் பேசுகிறேன். நீங்கள் சரியா, நான் சரியா என்று இந்த தேசத்தில் இருக்கின்ற மக்கள் தீர்மானிக்கட்டும். நான் தயார், நீங்கள் தயாரா? சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால் தான் அமித் ஷா உள்துறை அமைச்சர், நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை ஆளுநர், வானதி சீனிவாசன் வழக்கறிஞர், அண்ணாமலை ஐபிஎஸ்.

நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம் பேசுகின்றவர்களுக்கு மனசாட்சி இல்லையா? படித்தவர்களின் அறிவு சமூகத்துக்கு எதிராக செல்லக்கூடாது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் தமிழிசை ஆகியோரின் அறிவு இந்த சமுகத்துக்கு எதிராக செல்லக்கூடாது.

நான் திறந்த வெளியில் இருந்து சொல்கிறேன். முடிந்தால் வழக்கு போடுங்கள். மோடியைவிட, அமித் ஷாவைவிட, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட, ஆர்எஸ்எஸ்-ல் இருப்பவர்களைவிட வெள்ளையர்கள் நாணயமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது அனைவருக்கும் தெரியும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர். இதனை நிகழ்த்தியது ஜெரனல் டயர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை இதுதான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வருகை தந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என்று கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். விஞ்ஞானி புரூனோவை கிறிஸ்தவர்கள் நடுரோட்டில் வைத்து எரித்துக்கொன்றனர். அதற்கு போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார்.

மனிதனுக்கு மனிதன் பாவம் செய்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர், போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கின்றனர். ஆனால் மணிப்பூரில் பலரை கொன்றுவிட்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்வரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித் ஷா பாராட்டுகின்றனர். நான் கேட்கிறேன், மனிதனுக்கு தவறு இழைத்துவிட்டு மன்னிப்புக்கேட்ட வெள்ளைக்கார்கள், போப் ஆண்டவர் முன்னாள் நீங்கள் தூசுக்கு சமம்.

மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும். அப்படி மனிதனை மனிதனாக நேசிக்காத ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கின்ற பாஜக ஆட்சியை தூக்கி எரிவதற்கு நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE