அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் உருவ பொம்மை எரிப்பு @ மதுரை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை மதுரையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

சனாதனத்தை ஒழிப்போம் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாமியாரை கண்டித்தும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப் புலிகள் அமைப்பு சார்பில் சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா உருவ பொம்மையை மாநகர மாவட்டச் செயலாளர் பவ்லி வள்ளுவன் தலைமையில் எரித்தனர்.

மேலும் கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்களுக்கும் தீ வைத்தனர். இதனை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில், கிழக்கு மாவட்டச் செயலாளர் நீதிவேந்தன், தென்மண்டல செயலாளர் க.சிதம்பரம், மாநில செய்தி தொடர்பாளர் மா.முத்துக்குமார், மாவட்ட நிர்வாகிகள் முணியான்டி, முருகன் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE