விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கொண்டாடுங்கள் - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் வழங்குகின்றன. எனவே, நீர்நிலைகளைப் பாதுகாப்பது அவசியமாகும்.

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்க் கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளைபளபளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின்இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கைசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மொத்தத்தில், விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE