சென்னை: தமிழகத்தில் 100 தொகுதிகளில் முதல்வர் காப்பீட்டு பயனாளிகள் பதிவு செய்யும் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 139-வது வார்டு ஜாபர்கான்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளி, 140-வது வார்டு மேற்கு மாம்பலம் சென்னை மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம், 142-வது வார்டு மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகையில் சிகிச்சை பெறலாம்.
இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு முறையே 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த 2009 ஜூலை 23-ம் தேதி முதல் கடந்த ஆக.15-ம் தேதி வரை சுமார் 1.31 கோடி பயனாளிகள் ரூ.12,091 கோடி காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்ட பயனாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்ட அட்டை பெற்றுள்ள பிற மாநிலத்தவர்களுக்கும் சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை ஓர் ஆண்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு ரூ.699 ஆக இருந்தது. இந்த ஆட்சியில் ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியில் ஆண்டு காப்புறுதி தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் அது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1,450 ஆக இருந்த சிகிச்சை முறைகள் 1,513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 970 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை கள் எண்ணிக்கை 1,829 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2-ல்இருந்து 8 ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில், காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பொருத்தவரை, இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக தமிழகம் விளங்குகிறது. இத்திட்டத்தில் யாரும் விடுபட கூடாது என்பதால், தற்போது சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளன என்றார்.
சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.