ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: ஒரே நாடு, ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் அவர் பேசியது: கார்ல் மார்க்ஸை படிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கார்ல் மார்க்ஸை படிப்பதன் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 ஆண்டுகள் ஒரே தேர்தல் தான் நடந்தது. பின்னர், காங்கிரஸ் ஆட்சியில் சில மாநிலங்களில் ஆட்சியை கலைத்ததால் தனியாக தேர்தல் நடக்க ஆரம்பித்து, தற்போது, ஒரே ஆண்டில் 7 தேர்தல்களை நடத்தக் கூடிய நிலை உள்ளது.

தேர்தல் நடத்துவதற்கு 6 மாதத்துக்கு முன்பே ஆட்சியர் முதல் அங்கன்வாடி பணியாளர் வரை கிளம்பி விடுகின்றனர். தேர்தல் நடத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. பிறகு எப்படி அரசு அதிகாரிகள் மக்கள் பணியாற்றுவார்கள். அடிக்கடி நடத்தும் தேர்தலால் அரசு அதிகாரிகளின் பணி பாதிக்கப் படுகிறது. அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் முதல் 4 ஆண்டுகள் கொள்ளை அடிக்கின்றன.

அதன் பின் தேர்தலில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது இது போன்ற பிரச்சினை இருக்காது. ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

நாடு அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்றால் அடிக்கடி தேர்தல் நடத்தக் கூடாது. 5 ஆண்டுகள் சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE