ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுதல் வெற்றி - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சந்திராயன்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அடுத்த சாதனையாக சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய தருணம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டிருப்பதை அறிந்து, எனது மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்ரோவிஞ்ஞானிகளுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர் சாஜி மற்றும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, மற்றுமொரு இமாலய இலக்கை நோக்கி பயணிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யாஎல்-1 விண்கலம், சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாமக தலைவர் அன்புமணி: சூரியனை ஆய்வு செய்வதற்காக, விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும் இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானி களுக்கும் பாராட்டுக்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத உழைப்பாலும், முயற்சியாலும் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஏவப்பட்டு, சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை உலகநாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி கொண்டிருக்கும் அதேவேளையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE