நாட்டிலேயே முதலாவது கடற்பாசி பூங்கா - ராமநாதபுரத்தில் அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் எல்.முருகன் அடிக்கல் நாட்டினர். இந்தியாவிலேயே இதுதான் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி வரவேற்று பேசும்போது, “மத்திய அரசு ரூ. 78.77 கோடி மற்றும் தமிழக அரசு ரூ.48.94 கோடி பங்களிப்பு என மொத்தம் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. பாக்ஜலசந்தி கடல் பகுதியில் உள்ள 6 மாவட்ட மீனவர்கள், மீனவ பெண்கள் பயன் அடைவர்.

இதன் மூலம் 30 கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்பூங்காவில் கடற்பாசி விதைகள் உற்பத்தி, பயிற்சி மையம், சேமிப்பு கிடங்கு, உலர் கலங்கள் அமைக்கப்படும். இப்பூங்கா அமைந்தால் 8 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பயனடையும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தற்போது 15 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பூங்கா அமைந்தபின் 49 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பேசிய அவர், “நாட்டிலேயே முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் மீனவ பெண்களுக்காக கடற்பாசி பூங்காவை நிறுவியுள்ளார். ரூ.127.71 கோடியில் அமையும் இப்பூங்கா மூலம் 6 மாவட்ட மீனவர்கள், மீனவ பெண்கள் பயனடைவர். இப்பூங்காவை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முடிக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்த பின் முதன் முறையாக மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. இத்துறைக்காக இதுவரை ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். விவசாயிகளுக்கு போல், மீனவர்களுக்கும் கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேருக்கு கிஷான் அட்டை வழங்கி, ரூ. 4.71 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு கிஷான் அட்டை வழங்கப்படும். இப்பூங்கா இங்கு அமைந்ததும் மீனவர்களுக்கு கடற்பாசி விதை வழங்குதல், பயிற்சி அளித்தல், சந்தைப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் நீத்துபிரசாத், தமிழக மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், உதவி ஆட்சியர்(பயிற்சி) சிவானந்தம், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பாஜக மண்டல பொறுப்பாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE