மழைகால நோய்களை எதிர்கொள்ள மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மழைக்கால நோய்களை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்டசுகாதாரத் துறை உதவி இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்றுநோய்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கஉரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைநீர்,கழிவுநீர் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தையும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும், குடிநீரின் தரத்தை உறுதி செய்வதும் முக்கியம். அனைத்து சுகாதார மாவட்டங்கள், வட்டாரங்களில் புயல், கனமழைக்கு முன்பாகவே 24 மணி நேரமும் செயல்படும் வகையில் விரைவு சிகிச்சை குழுக்களை அமைக்க வேண்டும். கொசுக்கள், பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.

கொசு ஒழிப்பு நடவடிக்கை: மருத்துவ கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.கொசு உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாகமேற்கொள்ள வேண்டும். பருவமழைக்கு பிறகு ஏற்படும் காய்ச்சல்,வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பலாம். உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை இணைந்து, பருவகால தொற்றுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE