சென்னை: சென்னையில் உள்ள வருமான வரி இணை ஆணையரகம், டிடிஎஸ் பகுதி-3 சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலாளர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கம் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கடம்பத்தூர் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மில்க்கி ராஜா வரவேற்புரை வழங்கினார்.
வருமான வரி அலுவலர் ராஜாராமன், வருமானவரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் (TDS / TCS) விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும், வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம், வருமான வரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் காலாண்டு படிவம் தாக்கல் செய்ய வேண்டிய தேவை, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இவைகள் குறித்து விளக்கினார். குறிப்பாக, சம்பளம் மற்றும் ஒப்பந்த செலவில் வருமான வரிப் பிடித்தம் செய்வதன் அவசியம் குறித்தும் தெளிவாக விளக்கினார்.
வருமான வரி அலுவலர் டி.வி.ஸ்ரீதர், ஒப்பந்த செலவில், பஞ்சாயத்து தலைவர்கள் எவ்விதம் வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
வருமான வரி அலுவலர் கே.செந்தில் குமார், வருமான வரிப் பிடித்தம் விதிகளை பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் விளைவுகளை விளக்கினார்.
வருமான வரி பிடித்தம் ஆலோசகர் ஜானகி, வரிப் பிடித்தம் செய்த தொகையை, இணையம் வழியாக,மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல், டிரேசஸ் (TRACES) தளத்தில்டிடிஎஸ் காலாண்டு படிவங்களைஎப்படி தாக்கல் செய்வது என்பதுகுறித்து செயல் முறை விளக்கம் அளித்தார்.