தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (செப்.1, 2) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும், நாளை கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

திருபுவனத்தில் 14 செமீ மழை: அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும். ஆக. 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 14 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் 12 செ.மீ., நெமூர், வளவனூர் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் 10 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, விழுப்புரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: செப். 3, 4-ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE