மதுரையில் முதல் முறையாக தபால் நிலையங்களில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிறரின் துணையின்றி தாமாகவே செயல்படும் வகையில் மதுரை கோட்டத்தில் முதல் முறையாக சிறப்பு பாதை, வழிகாட்டும் சைனேஜ் பலகை அடங்கிய வசதிகள் மதுரை தலைமை தபால் நிலையம் மற்றும் தல்லாகுளம் தலைமை தபால் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன.

மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையத்திலும் மற்றும் தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்திலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அஞ்சலக சேவைகள் பெறவும், எந்த சேவைக்கு எங்கு செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அறியவும் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனவே பிறரின் துணையின்றி தாமாகவே எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பாதை, பிரெய்லி முறையில் எழுதப்பட்ட சைனேஜ் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்துக்கு வரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தாங்களே தொட்டு உணர்ந்து கவுன்டரை அடையும் வகையில் சிறப்பு டைல்ஸ் கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் “எந்த சேவைக்கு எந்த அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய பிரெய்லி முறையில் எழுதப்பட்ட சைனேஜ் பலகையும் நிறுவப்பட்டுள்ளது” என மதுரை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கோ.அ.கல்யாணவரதராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE