காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம்; திமுக அரசைக் கண்டித்து செப்.5-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: அமமுக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து அமமுக சார்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வரும் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும்; டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து அமமுக சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

கர்நாடக காங்கிரஸ் அரசையும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE