அறங்காவலர் நியமனம் | மாவட்டக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தினால் தகுதி நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், சிறப்பு பணி அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது அதிகாரிகள், "மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 473 கோயில்களில், அறங்காவலர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்து 187 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.38 மாவட்டங்களிலும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள், நாளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்" என்று விளக்கம் அளித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், "மாவட்ட குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் அரசியல் கட்சி சார்புள்ளவர்களாக இருக்கின்றனர்" என்று புகார் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும். மாவட்ட குழுக்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, மாவட்ட குழுக்களில் அரசியல் சார்புள்ளவர்கள் நியமிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

மாவட்ட குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். மேலும், அதிகாரிகள் இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE