மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம்.

மேலும், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இந்தக் கணக்குக்கு இருப்பு தொகை (Zero Balance Account)எதுவும் கிடையாது .

தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும் தங்கள் இல்லங்களிலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டப் பயனாளிகள், பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிதான குறைந்த கட்டணங்களுடன், நகரங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய முறையில் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

எனவே, பயனாளிகள் அனைவரும் அஞ்சல் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையுமாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE