அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி கோரிக்கைகளைப் பெற்று முடிவெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2006 முதல் 2011 ஆம் அண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய கட்டணம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2012-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாண வெளியிட்டது குறித்து ஆகஸ்ட் 28ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக கொள்கை முடிவெடுத்து, விதிகளை வகுக்க வேண்டியுள்ளது. எனவே, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரி பொதுத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளது, எனக் கூறி, அந்தக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் கட்டண பாக்கியை வழங்கக் கோரி வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, அரசு தலைமை வழக்கறிஞர் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதை அமல்படுத்த அரசு முன்வரவில்லை. நீதிமன்றம், தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என்றோ, பரிசீலிக்கப்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பொதுத் துறை செயலாளர் கோரிக்கையை ஏற்று ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த கால அவகாசத்துக்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்கும் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை செப்டம்பர் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE