சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (ஏஐசிடிஇ) ஆலோசகர் மம்தா ஆர்.அகர்வால், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நாள் போன்றவற்றை உறுதி செய்ய உதவும் வகையில் மாணவர்களின் பட்டச் சான்றில் ஆதார் எண்ணை முழுமையாக அச்சிடுவது தொடர்பாக சில மாநில அரசுகள் ஆலோசித்து வருவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
பொதுவான இடத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் தனிநபரின் ஆதார் எண்ணை குறிப்பிடுவது ஆதார் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானது. வேண்டுமானால் குறிப்பிட சில எண்கள் மட்டுமே தெரியும் வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன்மூலம் பட்டச் சான்றில் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.