சொத்து குவிப்பு வழக்கு: புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனைவியுடன் நேற்று ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்தை விட 54 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் 2021-ம் ஆண்டில் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

அதில், ரூ.23 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி பொருட்கள், 136 கனரக வாகன பதிவு ஆவணங்கள்,19 ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின் கடந்த மே மாதம் 216 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கின் முதல் விசாரணை கடந்த 5-ம் தேதி தொடங்கிய நிலையில் அன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரது மனைவி ரம்யா அன்று ஆஜராகாத நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த், இந்த வழக்கை செப்.26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE