அதிமுக நிர்வாகி விந்தியா குறித்து அவதூறு: திமுக நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளரான நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா. அவரைப் பற்றி அவதூறாக பேசி திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து குமரன் மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குமரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விந்தியா குறித்து தாம் தவறாக எதுவும் பேசவில்லை. தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டீக்காரமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குமரனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என விந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குமரனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE