மருத்துவக் கல்லூரியில் சேரவிருந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர இருந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போருர் அடுத்த அய்யப்பன் தாங்கல், சீனிவாசபுரம், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குரு. இவரது மகன் ரிஷிகேஷ் (18). விருகம்பாக்கம், லோகையா காலனியை சேர்ந்தவர் ஹரீஷ் (18). இவர்கள் இருவரும் நண்பர்கள். இதேபோல் மாங்காட்டைச் சேர்ந்த நண்பர்களான ரிஸ்வான் (18), சாம் (18) ஆகியோருடன் செம்

பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க வந்தனர். பின்னர் ஏரிக்கரையின் மீது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏரியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ரிஷிகேஷும், ஹரீஷும் செம்பரம்பாக்கம் ஏரியின் 4-வது மதகின் கீழே இறங்கி நீரில் கால்களை நனைத்து விளையாடியுள்ளனர். அப்போது இருவரும் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்போது உடன் வந்த நண்பர்கள் இவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால் குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீஸார் பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தேடி ரிஷிகேஷ், ஹரீஷ் இருவரையும் சடலமாக மீட்டனர். இவர்களது சடலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரிஷிகேஷுக்கு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஹரீஷ் கவுன்சிலிங் முடித்துவிட்டு கல்லூரிக்காக காத்திருந்துள்ளார்.

இருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை தொடங்க இருந்த நிலையில் நண்பர்களுடன்சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது ஏரியில் மூழ்கி இருவரும் இறந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE