திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஆக. 27, 28) சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் செப். 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 95 டிகிரி, குறைந்த பட்ச வெப்ப நிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

சூறாவளிக் காற்று: இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 29, 30-ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE