மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஏற்கெனவே பல்கலை. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார்பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்றனர்.

இதையடுத்து, கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கியவரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பணிகளையும் முடித்து, ஜூன் மாதத்துக்குள் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அறிக்கை தயாரிப்பு முடிவடையாததால், இந்தக் குழுவுக்கு செப்டம்பர் வரை 3 மாதங்கள்கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், குழுவில் 2 புதிய உறுப்பினர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர்,அறிக்கை வடிவமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில், மாநிலக் கல்விக்கொள்கைக்கான வரைவறிக்கை வடிவமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கைக்கு இறுதி ஒப்புதல் பெறுவதற்காக, குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்வரும் 30-ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்குறித்து விவாதித்து இறுதி முடிவுஎடுக்கப்பட உள்ளது. ஏதேனும்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால், அதை உடனே மேற்கொண்டு ஒப்புதல் பெறப்பட்ட மாநிலக்கல்விக் கொள்கைக்கான வரைவறிக்கை அரசிடம் செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE