ரூ.10 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இமாச்சல் முதல்வர் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: இமாச்சலப் பிரதேச பேரிடர் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.10 கோடி நிதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பேரிடர் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும், தேவையான உதவிகள் செய்யப்படும் என்று 2 தினங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ரூ.10 கோடி நிதி முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை, பரிவுணர்வு: இந்நிலையில், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இமாச்சல பிரதேச பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடியை பெருந்தன்மையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு, பேரிடர் காலங்களில் ஒற்றுமை மற்றும் பரிவுணர்வை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து ஒன்றிணைந்து கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE