குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் - நிலம், குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நிலம் மற்றும் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக, பதிவுத் துறைதலைவர் அலுவலகத்தில் இருந்துஅனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்டபதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரஅடியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவாக உள்ளன.

வங்கிகள் வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால் மனை நிலம் வாங்குவோர் வங்கிகளில் தேவையான அளவுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்கவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கவும் ஆக.16-ம் தேதி மைய மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்துக்குப்பின் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர் மற்றம் காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என்று நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் மற்றும் இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100-ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டமதிப்புகள் இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்தபட்ச மதிப்புக்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழக பதிவுத் துறையானது பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வையை 11 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைத்தாலும், வழிகாட்டி மதிப்பில்குறைக்கப்பட்டிருந்த 33 சதவீதத்தை மீண்டும் உயர்த்தியது. இதனால், வீடு, நிலம் வாங்குவோருக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, அடுக்குமாடி கட்டிடம் வாங்குவோருக்கான பதிவு விதிகளில் திருத்தம் செய்து, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவோர் அதன் முழு பரப்புக்கும் கணக்கிட்டு அதனைப் பொறுத்து 9 சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றுஅறிவுறுத்தியது. இதன் காரணமாக வீடு வாங்குவோர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியதுள்ளது.

இந்நிலையில், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்துள்ளதால், மனைகளின் சந்தை மதிப்பு உயரும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்திய கட்டுநர் சங்கத்தின் நகராட்சி மற்றும் டிடிசிபிகுழுவின் தலைவர் எஸ்.ராமபிரபுகூறும்போது, ‘‘குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்துள்ளதன் மூலம், சில இடங்களில் வழிகாட்டிமதிப்பை காரணம் காட்டி மனைகளின் சந்தை மதிப்பை உயர்த்தி விடும் நிலை உள்ளது. அதேநேரம், வழிகாட்டி மதிப்பு உயர்வதால் வங்கிகளில் ஓ.டி. பெறுவது, கூடுதல்கடன் பெறுவது போன்ற வசதிகளும் நில உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு உள்ளது.

இருபுறமும் சமநிலையான வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கானவழிகாட்டி மதிப்பும், அருகில் உள்ளதெருவில் இருக்கும் வீடுகளின் வழிகாட்டி மதிப்பும் ஒரே மாதிரியாக இருந்தாலும், சந்தை மதிப்பு என்பது வேறுபடுகிறது. எனவே, புல எண்கள் அடிப்படையில் அவற்றுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைப்பது நன்மையை தரும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE