அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர்.

கடந்தாண்டு ஜூலை 11 அன்றுநடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி ஓபிஎஸ் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் 28-ம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் இன்று (ஆக.25) காலை தீர்ப்பளிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE