கோவை: “நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். இனி குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். எனவே, அரசு சார்பில், குடியரசுத் தலைவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும். நீட் குறித்து ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநருக்கு எதிரான திமுகவின் நீட் தேர்வு போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நீட் தேர்வில் ஆளுநரின் பங்களிப்பு என்று எதுவுமே இல்லை. அவருக்கு இப்போது எந்தப் பங்களிப்பும் இல்லை. அரசு அவருக்கு அனுப்பிய கோப்பில் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். இனி குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.
எனவே, அரசு சார்பில் குடியரசுத் தலைவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும். அதேநேரம் ஆளுநர் சில கருத்துகளைக் கூறுகிறார். அதில் தவறு என்ன இருக்கிறது? நீட்டைப் பொறுத்தவரைக்கும் ஏழைகளுக்கு எதிரி இல்லை என்று கூறியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆளுநரைப் பொறுத்தவரையில், அவர் கூறியுள்ள புள்ளி விவரங்களுடன் கூடிய தகவலில் எந்த தவறும் இல்லை.
ஆனால், ஆளுங்கட்சியினர் ஆளுநரைப் பேசுகின்ற முறை சரியானதா? சீண்டிப்பார், தொட்டுப்பார், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வா, தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்க சொல்கின்றனர். ஒருவேளை ஆளுநர் தனது சொந்த ஊரான பிஹாருக்கு வரச் சொன்னால், என்ன செய்வார்கள்? திமுகவினருக்குத்தான் இந்தி தெரியாதே?
சரி, ஆளுநர் அதிகாரியாக இருந்து வந்தவர். நான் அரசியலுக்கு வருகிறேன். தான் தேர்வெழுதி அதிகாரியானது போல், என்னுடன் தேர்தலில் போட்டியிடுபவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்று வர வேண்டும் என்று ஆளுநர் கூறினால் என்ன செய்வார்கள்?
எனவே, ஆளுநரை இதுபோல பேசுவது தவறு. கைத்தட்டல்களுக்கு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கண்டதை எல்லாம் பேசிவிட்டால் அந்தப் பாம்பு திரும்ப வந்து கொத்திவிடும். எனவே, ஆளுநரைப் பொறுத்தவரை அவருக்கும் நீட்டுக்கும் தொடர்பு இல்லை. இப்போது சம்பந்தமே இல்லாமல் ஆளுங்கட்சியினர் ஆளுநரை வம்பிழுத்துக் கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.