ஆய்வுக்கு வருவது தெரிந்து டாஸ்மாக் கடைகளில் அவசர விலைப்பட்டியல்: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் வழக்கறிஞர்கள் குழு ஆய்வுக்கு வருவது தெரிந்து டாஸ்மாக் கடைகளில் அவசர அவசரமாக விலைப்பட்டியல் வைக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தை குறைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, "மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மது பாட்டில்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களில் விலை விவரம், புகார் தெரிவிக்க வேண்டிய எண் ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரையாக குறைக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் குழு தாங்கள் ஆய்வு செய்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியல் வைத்திருப்பது தொடர்பாக புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர் குழு ஆய்வை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அவசர கதியில் விலை பட்டியல் வைக்கப்பட்டிருப்பது அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் நிரந்தரமாக மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE