அதிமுக பொதுச் செயலாளர் பதவி: சசிகலா மேல்முறையீட்டு மனு மீது ஆக.30-ல் ஐகோர்ட் விசாரணை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE