‘ரேஷன் கடையை காணவில்லை’ - ஓசூர் வட்டாட்சியரிடம் இளைஞர் மனு

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே காணாமல் போன ரேஷன் கடையைக் கண்டுபிடித்துத் தரக்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்தார். ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தனப்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (37).

இவர் நேற்று ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: சித்தனப்பள்ளியில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டது. இக்கடையில் 120 ரேஷன்கார்டுதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து மழை நீர் அறைக்குள் வடிந்ததால், உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. இதனால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மனு அளித்தோம்.

இதையடுத்து, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்தபோது ரேஷன் கடையைக் காணவில்லை. எனவே, காணாமல் போன ரேஷன் கடையைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரித்தபோது, பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டு முதமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அருகேயுள்ள சிறிய கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, சீரமைக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் மீண்டும் ரேஷன் கடையைச் செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க காணாமல் போன ரேஷன் கடையை கண்டிபிடித்து தரக்கோரி இளைஞர் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE