தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வேகமாக சரியும் அமராவதி அணை நீர்மட்டம்

By எம்.நாகராஜன்

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. அணை நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள 5,200 ஏக்கர் நெல் பயிரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உடுமலை அடுத்த அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்யும் மழை நீரை முக்கிய ஆதாரமாக கொண்டு இந்த அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் அணைக்கு கூடுதல் நீர் வரத்து கிடைத்தது. அதனால் அணையின் நீர்மட்டமும் குறையாமல் இருந்தது. பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை தொடங்கி டிசம்பர் மாத இறுதி வரையிலும் அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவிலேயே இருந்தது. தவிர அணையில் இருந்து 16 டிஎம்சி நீர் உபரியாக திறக்கப்பட்டது. இது 4 முறை அணை நிரம்பியதற்கு சமம்.

கடந்த ஆண்டு அணையின் நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பலரும் மீண்டும் 2-ம் போக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், மடத்துக்குளம், சோழமாதேவி, கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பழைய வாய்க்கால் பாசனத்தில் மொத்தம் 7,260 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. அதில் 70 சதவீதம் பேர் நெல் சாகுபடி செய்துள்ளனர். இவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் வரை தண்ணீர் திறக்கப்படும் என்ற அரசாணை உள்ளது. தற்போதைய நிலையில் அணையில் இருந்து நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்து அணையில் இருந்து 2 முறை பிரதான வாய்க்காலிலும், கரூர் பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதமே அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இறுதிகட்டத்தை எட்டிய நிலையிலும் அணையின் நீர்இருப்பு 56 அடியாக உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக விநாடிக்கு 400 கன அடி நீர்வரத்து இருந்தது. இம்மாதம் சராசரியாக விநாடிக்கு 180-190 கன அடியாகவே உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் பழைய வாய்க்கால் பாசனத்துக்குட்பட்ட நெல் பயிர்களுக்கு தேவையான நீர் விநியோகிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இயற்கையில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE