சென்னை: சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி 10 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இன்று வழக்கம்போல் தனது 10 வயது மகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவிலம்பாக்கம் பகுதியில், மெட்ரோ உள்ளிட்ட பணிகள் காரணமாக சாலைகள் சரி இல்லை என்றும், அப்பகுதிகளில் செல்லும் அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக உயிரிழந்த குழந்தையின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பள்ளி மாணவி மீது மோதி உயிரிழப்புக்கு காரணமாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர், அந்த லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடத்துக்கு சென்ற 10 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.