விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை: இந்து முன்னணி ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 6,000 சிலைகள் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். சிலை கரைப்பு ஊர்வலம் செப்.24-ம் தேதி நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி செப்.18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் கடந்த 6-ம் தேதி நடந்தது. இதில், விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, செப்.18-ம் தேதி விநாயகர் பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, ஒரு வார வழிபாட்டுக்கு பிறகு, செப்.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசர்ஜன இந்து எழுச்சி ஊர்வலமாக விழாவை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், தற்போது 2 லட்சம் சிலைகள் அமைக்க இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தி என்பது இந்து சமய ஒற்றுமை பெருவிழா ஆகும். இந்த ஆண்டு ‘அன்னைத் தமிழை காக்க, ஆன்மிகத்தை வளர்ப்போம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 2 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 6,000 சிலைகள் வைக்கப்பட உள்ளன.

விழா குழுவினர் செப்.17-ம் தேதி காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள். இந்து முன்னணி சார்பில் செப்.18-ம் தேதி மாலை மகா ஆரத்தி, 19-ம் தேதி ராம கோபாலன் பிறந்தநாள் விழா, 20-ம் தேதி இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது.

தொடர்ந்து, 21-ம் தேதி இந்து ஒற்றுமை தினம், 22-ம் தேதி அன்னையர் தினம், 23-ம் தேதி தாய்மொழி தினம், 24-ம் தேதி இந்து எழுச்சி - விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. வழக்கம்போல உற்சாகம், கட்டுப்பாட்டுடன் விசர்ஜன ஊர்வலம் நடைபெறும். நிறைவு விழா நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE