வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காரைக்குடியைச் சேர்ந்த கணேசதேவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனது சுய லாபத்துக்காக வன்னிய சமூகத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன்பு வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முக்குலத்தோர் அமைப்புகள் சார்பில் ஆகஸ்ட் 20-ல் மதுரை முனிச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜுனா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் மனு பரிசீலனையில் உள்ளது என்றார். இதற்கு அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தரப்பில், "மாநாடு நடைபெறும்போது வேண்டுமென்றே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது" என்றனர்.

இந்நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE