அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டட்விட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது:

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதையொட்டி, சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில், தென்னை விவசாயிகளின் நலன்கருதி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

10.98 லட்சம் ஏக்கரில் சாகுபடி: தென்னை விவசாயிகளின் இந்த கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் கூடுதலான தேங்காய்கள் விளைகின்றன. ஆனாலும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு தேங்காய்கள் வருவதால், அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவதுதான்.

அந்தவகையில், தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் 6 மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கும் மாதத்துக்கு குறைந்தது 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யாவது வழங்கப்பட்டால்தான் தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்கும். எனவே, மத்திய அரசுடன், தமிழக அரசும் இணைந்து, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE