ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் - உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் வாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘ஆன்லைனில் விளையாடுபவர்கள் யாரும் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக ஆன்லைனில் இந்த சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள்தான் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் பல அப்பாவிகள் இதற்கு அடிமையாகி உயிரை மாய்த்துள்ளனர்.

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலேயே அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய தமிழக அரசுக்கு அனைத்துஅதிகாரமும் உள்ளது’’ என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞரான அமித் ஆனந்த் திவாரி, ‘‘ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது. நேரில் விளையாடுவதற்கும், ஆன்லைனில் மறைமுகமாக விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் மட்டுமல்ல, அடிப்படையே தவறானது. இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்களை ஒருபோதும் ஒழுங்குபடுத்த முடியாதுஎன்பதால்தான் இந்த தடைச்சட் டமே கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் ரூ.900கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள் ளன’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான சூதாட்ட விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது’’ என்றார்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், ‘‘நேரடியாக விளையாடும்போது மட்டுமே ரம்மி, திறமைக்கான விளையாட்டு. அதை எதிரே இருப்பவர் யார் எனத் தெரியாமல் மென்பொருளால் வடிவமைக்கப்பட்ட இயந்திரத்துடன் ஆன்லைனில் விளையாடும்போது அது சூதாட்டமே’’ என்றார்.

இதேபோல ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது தலைமை நீதிபதி, ‘‘ஆன்லைனில் ரம்மி விளையாட கட்டணமாக எவ்வளவு தொகை வசூலி்க்கப்படுகிறது?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ்பராசரன், ‘‘ஆன்லைனில் ரம்மி விளையாட பந்தயமாக செலுத்தப்படும் மொத்த தொகையில் 10 முதல் 15 சதவீதம் கட்டணமாக வெற்றி பெற்றவரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் இந்தவழக்கு விசாரணையை ஆக.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE