ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 16-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்திருந்தது. மாலை 5 மணி அளவீட்டின்போது இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

மேட்டூரில் 9,394 கனஅடி: மேட்டூர் அணைக்கு, நேற்று காலை 3,260 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 9,394 கனஅடியாகவும் அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 53.15 அடியாகவும், நீர் இருப்பு 19.85 டிஎம்சியாகவும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE