பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு முழுஉருவ வெண்கல சிலை - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகர் ‘சிம்மக்குரலோன்’ என அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜனக்கு, அவரது சொந்த ஊரான மதுரையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு திறந்து வைத்தார்.

தமிழ் திரையுலகத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான டி.எம்.சௌந்தரராஜன், கடந்த 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். கடந்த 1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தனது குரல் வளத்தால் தமிழ் இசையுலகில் கொடிக்கட்டிப்பறந்தார். சினிமாவில் மட்டுமில்லாது ஆன்மீகம், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிற்காகவும் ஏராளமான பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனங்களை கவர்ந்தார்.

மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இவரை தமிழக மக்கள் 'சிம்மக்குரலோன்' என அழைத்தனர். காலத்தால் அழியாத பாடல்களை வழங்கிய அவர், கடந்த 25.5.2013 அன்று மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களும், புகழும் மறையவில்லை. பிறந்த ஊருக்கு தன்னுடைய கனீர் குரலால் பாடி பெருமையும், புகழும் சேர்த்த அவருக்கு அதே ஊரில் சிலை நிறுவ வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் மதுரையில் சிலை நிறுவப்படும் என அறிவித்தார். அந்தவகையில் மதுரையில் ரூ.50 லட்சத்தில் மதுரை முனிச்சாலையில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகம் வளாகத்தில் டி.எம்.சௌந்தரராஜனுக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா இன்று இரவு நடந்தது.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு இரவு 7.18 மணியளவில் வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், கட்சி முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். சரியாக 8.40 மணிக்கு விழா நடந்த இடத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 450 கிலோ எடை கொண்ட டி.எம்.சௌந்தரராஜனின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

விழா நடந்த இடத்தில் சுற்றிலும் கூடி நின்ற மக்கள் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் ஆர்ப்பரிப்பையும், மகிழ்ச்சியும் கைகூப்பி ஏற்றுக் கொண்டு அவர், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டி.எம்.சௌந்தரராஜன் உருவபடத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தான் திறந்து வைத்த டி.எம்.சௌந்தரராஜன் சிலை முன்பு, மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின், விழா மேடையின் முன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த டி.எம்.சௌந்தரராஜன் மகன் டி.எம்.எஸ்.பால்ராஜ் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை அழைத்து ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்கள், முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விழாவை காண திரண்டிருந்த பொதுமக்களை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கி நெருங்கி சென்று கையசைத்தார்.

பொதுமக்கள் வழங்கிய புத்தகங்கள், சால்வைகள், நினைவு பரிசுகள், மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, பி.மூர்த்தி, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி, எம்பி.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தொடர்ந்து இன்று இரவு மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE