மதுரை: நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அம்மன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் எம்எல் கோ.தளபதி, மு.பூமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். முன்பாக முதியோர் மற்றும் ஆதரவேற்றார் இல்லத்தைச் சேர்ந்த ஆதரவற்றோருக்கு காணிக்கையாக வரப்பெற்ற நூல்புடவைகள் , வேட்டிகள் வழங்கப்பட்டன.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதனை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி துவக்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மேலும் 200 பேருக்கு பருத்தி புடவை, வேட்டி இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு இலவச பருத்தி புடவை, வேட்டி வழங்கப்பட்டன.