சட்ட உதவி மையங்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தல் 

By கி.மகாராஜன் 


மதுரை: சட்ட உதவி மையங்கள் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.

மதுரையில் ஃபைகஸ் என்ற இலவச சட்ட உதவி மைய தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த மையத்தை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உரிய சட்ட உதவிகள் கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அரசாங்கமும், நீதிமன்றமும் மட்டுமே இலவச சட்ட உதவி அளிக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதனால் இதுபோன்ற சட்ட உதவி மையங்கள் ஏழை, எளிய மக்களுக்கு முறையான உதவிகளை செய்ய வேண்டும்.

சுதந்திர தினத்தன்று சட்ட உதவி மையம் தொடங்கப்படுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மையம் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். வழக்கறிஞர் தொழிலுடன் தொழிலையும் இலவச சட்ட உதவி மைய பணிகளையும் வெவ்வேறு பாதையில் கொண்டு செல்வது அவசியம். இந்த மையத்தின் வாயிலாக திறமையான வழக்கறிஞர்களையும் உருவாக்க வேண்டும். சட்டரீதியான நடவடிக்கைகள் இலவச சட்ட உதவி தொடர்பான தகவல்களை தொகுத்து அச்சிட்டு வழங்குவதை வழக்கமாக கொள்ளுங்கள். தகுதியான நபர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவது அவசியம். அதற்காக நான் உள்பட அனைவரும் பல்வேறு உதவிகளை செய்வோம், என்று அவர் பேசினார்.

முன்னதாக ஃபைகஸ் இலவச சட்ட உதவி மைய தலைவர் ஆண்டிராஜ் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி, வழக்கறிஞர் கு.சாமித்துரை, மதுரை சட்டக் கல்லூரி முதல்வர் குமரன் உட்பட பலர் பேசினர். மூத்த வழக்கறிஞர் சுபாஷ் பாபு, பெண் வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணவேனி, வழக்கறிஞர்கள் ஜெயந்தி, வினோத், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE