நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆவதால், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் 2 முறை நீட் தேர்வு எழுதிதோல்வி அடைந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சோகம்தாங்காமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET - ‘நீட்’) தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்திபயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது. அடிப்படையிலேயே ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்த தேர்வு முறை உள்ளது.

நீட் போன்ற நுழைவுத் தேர்வின்அடிப்படையில் சேர்க்கை நடப்பதைவிட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும். நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களுக்கு தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழகத்தின் கருத்து.

நீதிபதி குழு ஆய்வு: நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

இந்த குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட மசோதா - 2021' தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்.13-ம்தேதி நிறைவேற்றப்பட்டு, 18-ம் தேதிஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் 5 மாதங்களுக்கு பிறகு, அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, 2022 பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. ஆளுநர், இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதா தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கடந்தஜூன் 21-ம் தேதி கோரிய விளக்கங்கள், மத்திய உயர்கல்வி அமைச்சகம் கடந்த 2022 ஆக.26 மற்றும் கடந்த மே 15 ஆகிய தேதிகளில் கோரிய விளக்கங்கள், மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஜன.13-ம் தேதி கோரிய விளக்கங்கள் மத்திய உள்துறை மூலம் பெறப்பட்டது. மத்திய அமைச்சகங்கள் கோரிய அனைத்து விவரங்களையும் தமிழக அரசு விரைவாக வழங்கியது.

ஆனால், தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல்அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது மாணவர்கள், பெற்றோர் மனதில் மிகுந்த கவலை, மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோரும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்திருப்பது கவலை அளிக்கிறது.

சமீபத்தில்கூட, நீட் தேர்வில் தோல்விஅடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு மாணவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மக்களின் கருத்து: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய, நீட் விலக்கு மசோதா தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதை செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள்தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவதற்கும் காரணமாக அமைகிறது. இந்த விவகாரத்தில் இந்தியகுடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு, நீட் தொடர்பான சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE