“தெளிவாக முடிவெடுப்பதில் சிறந்தவர்” - கருணாநிதி குறித்து மாணவர்களிடம் விவரித்த பழனிவேல் தியாகராஜன்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ''அனைவர் கருத்தையும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் உள்வாங்கிக்கொண்டு, அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்பார் கருணாநிதி'' என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ராஜா முத்தையா மன்ற அரங்கத்தில் இன்று நடந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இந்தப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, “கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கிடையே பேச்சு போட்டியை நடத்திட வேண்டும் முதல்வர் உத்தரவிட்டதால் போட்டிகள் நடைபெற்று இந்தப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

கல்லூரி கல்வியை காணாத மாணவர்களிடம் சுயமாக இதுபோன்ற பேச்சுத் திறமைக்கு காரணம் அவர்தம் மொழிப்பற்று ஆகும். மனித திறனில் இருப்பதிலேயே சிறந்த அம்சம் தொடர்புத்திறன் ஆகும். எழுதுவது, பேசுவது, கருத்துக்களை பரிமாறிக்கொள்வது என அதில் உள்ளடக்கம். அதில் பொதுக் கூட்டங்களில் பலர் முன்னிலையில் பேசுவது என்பது பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கும். சிலருக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்கும். அதில் முதன்மையானவர் கருணாநிதி. அதனால் தான் இன்றைக்கு வரை எல்லோரும் கூறுவது போல தமிழையும் கருணாநிதியையும், தமிழர்களையும் கருணாநிதியையும், தமிழ்நாட்டையும் கருணாநிதியையும் பிரித்து பார்க்கவே முடியாது.

எந்த அளவிற்கு பேசுவது எழுதுவது திறமையோ அதே அளவிற்கு கேட்டுக்கொள்வது தகவலை உள்வாங்கிக்கொள்வது, அடுத்தவர்களிடம் தகவல் கண்டறிவது மிகப்பெரிய திறமை. பொறுப்புகள் கூடுகிற போது வந்தடைகிற உண்மை தகவல்கள் குறைவாகி விடும். இது அரசியல் உள்ளிட்ட அத்தனை துறைகளுக்கும் பொருந்தும். ஆனால் கருணாநிதியோ எந்த ஒரு நிகழ்வை பற்றியோ எந்த கருத்தை கேட்பார் என நமக்கே தெரியாது.
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நான்கு மணிக்கெல்லாம் துறை செயலாளரிடம் பேசுவார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார். இப்படி கடைக்கோடி வரை உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அவர் இருந்த உயர்ந்த இடத்தில் இருந்தே தகவல்களை பெற்று விடுவார். இந்த திறமை கோடியில் ஒருவருக்கு தான் இருக்கும். அதேபோல் கூட்டம் நடத்தும் போது கூட கூட்டத்தில் உள்ள அனைத்து நபர்களின் கருத்தை எந்த ஒரு குறுக்கீடு இல்லாமல் உள்வாங்கிக்கொண்டு அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்பார் கருணாநிதி.

அத்தகைய உலகத்திலேயே சிறந்தவருக்கான நினைவை போற்றுகிற வகையில் போட்டிகள் இங்கே நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்து கொள்வதை எனக்கு பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் கல்வித்திட்டம் சிறப்பாக இருந்தாலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல நிறுவனங்கள் அரசாங்கங்களிடம் கூறுவது எங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் கல்வித்திட்டத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் உள்ள தொடர்பு இடைவெளி தான் காரணம். அதை திருத்துவதற்காகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை சிறப்பு திட்டமாக ஓராண்டுக்கு முன்பு தலைவர் கருணாநிதி நினைவு நாளன்று தொடங்கி வைத்தார்'' என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மண்டல தலைவர்கள் வாசுகி, புவனேஸ்வரி, முகேஷ் ஷர்மா, பாண்டிச்செல்வி சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர்கள் கு.ஞானசம்பந்தன், ராஜா கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE