மதுரை: குளத்தில் மணல் அள்ளுவதற்கு தடை கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தவர் தனது நேர்மையை நிரூபிக்க ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ராகவன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தென்காசி மாவட்டம் சிவகிரியில் அமைந்துள்ள சின்ன ஆவுடைபேரி குளத்தில் வணிக ரீதியாக மணல் அள்ளுவதற்கு தனி நபருக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''மனுதாரர் இந்த வழக்கை பொதுநல நோக்குடன்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். இதனால் உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் பெயரில் வழக்கு முடியும் வரை வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.