சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது.
இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வெட்டிய வழக்கில் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது
» திருவண்ணாமலை கிரிவல பகுதியில் அசைவ உணவகங்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம்
கூடவே ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வெட்டிய வழக்கில் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது