ராஜன் கண் மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பில் 2 அதிநவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையின் 28-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நல்லி குழும இயக்குநர் நல்லி குப்புசாமி, தமிழ்நாடு கண்மருத்துவமனை சங்கத்தின் தலைவர் நிர்மல் ஃபெட்ரிக், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன், சுஜாதா மோகன், ராஜன் கண் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் ராகவன் சம்பத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராஜன் கண் மருத்துவமனைக்கான 2 அதிநவீன கண்அறுவை சிகிச்சை உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனும் அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து ராஜன் கண் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர்ராகவன் சம்பத்துடன், ராஜன் கண்மருத்துவமனை இணைந்து சென்னை அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கிய ரூ.75 லட்சம் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு கண் மருத்துவமனை இயக்குநர் சித்ராவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் பேசியதாவது: ராஜன் கண் மருத்துவமனை 1995-ம் ஆண்டு சிறிய மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது, தற்போது பன்னோக்கு சிறப்பு கண்மருத்துவமனையாக உருவாகி உள்ளது. தனியார் மருத்துவமனை பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், தேசிய அளவில் 7-வது இடத்திலும் இருக்கிறோம். ஒவ்வொரு வகையான கண் பாதிப்புகளுக்கும், அதற்கான சிறப்பு மருத்துவர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம்.

தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், 35 சதவீதம் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சையும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்தஆண்டு விழாவுக்கு 2 அதிநவீனகண் அறுவை சிகிச்சை உபகரணங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். கிட்டப்பார்வை, தூரப் பார்வைக்கான ரூ.6 கோடி மதிப்பிலான ‘ஸ்மைல்’ லேசர் என்ற ஒரு உபகரணமும், ரூ.3 கோடி மதிப்பில் முப்பரிமாண கண் அறுவை சிகிச்சை உபகரணமும் அறிமுகம் செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ``தற்போது தேசிய அளவில் 7-வது இடத்தில் இருக்கும் ராஜன் கண் மருத்துவமனை விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும். தமிழக ஆளுநர்கள் அனைவரும் ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றன. தற்போது தனியார் மருத்துவமனையில் உள்ள கட்டமைப்புகளைப் போல, அரசு மருத்துவமனையும் உருவாகி வருகிறது.

தனியார் மருத்துவமனைக்கு நிகராக அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா காலத்தில் ஏற்பட்டகரும்பூஞ்சை நோய் பாதிப்பு தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டது. இதற்கு காரணம் மருத்துவர் மோகன் ராஜன்தான்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE