தருமபுரி | காரிமங்கலம் அருகே மின் விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின் விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் திண்டல் ஊராட்சி உடைஞ்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவர் மனைவி மாதம்மாள் (60). இவரின் வீட்டின் முன்பு துணி உலர்த்தும் தேவைக்காக மின் கம்பத்தில் கம்பி ஒன்றை கட்டி வைத்திருந்தனர். இன்று (ஆகஸ்ட் 11) காலை 6 மணி அளவில், அந்தக் கம்பியில் ஏற்கெனவே உலர வைக்கப்பட்டிருந்த துணியை எடுக்க மாதம்மாள் முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் மாதம்மாள் அலறியுள்ளார். சத்தம் கேட்டு மாதம்மாளின் மகன் பெருமாள் (33) ஓடி வந்து காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பயந்துள்ளது. இதைக் கண்டு பெருமாளின் அத்தை சரோஜா (60) இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் மயக்க நிலையை அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாகத் கொண்டு சென்றனர். அங்கு 3 பேரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE