மழையில்லாததால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181 கோடி இழப்பீடு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையின்றி பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணை: கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் போதிய மழையில்லாததால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்களில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, திருவாடானை, ராமநாதபுரம், நயினார்கோயில், திருப்புல்லானி, ஆர்.எஸ்.புரம், மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட 25 வட்டங்களில் 1,42,832 ஹெக்டேர் பரப்பில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. 1,87,275 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடாக ரூ.181.40 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE