வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே வனப்பகுதியில் குடியேறிய பழங்குடியின மக்கள், 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை ராம் நகரில் 84 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்.
வனப் பகுதிக்குள் சென்று தேன், கிழங்கு, பட்டை, சாம்பிராணி உள்ளிட்ட 11 வகையான பொருட்களை சேகரிப்பதற்கு கட்டுப்பாடின்றி வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் வனப்பகுதியில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
இதற்காக இவர்கள் வீடுகளிலிருந்து பொருட்களுடன் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில், குத்துக்கல், பூலாம் பாறை வனப் பகுதியில் குடில் அமைத்து தங்கிய பழங்குடியின மக்கள், அங்கேயே சமைத்து உண்டு நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.