மாநில ஹஜ் குழு மூலம் பயணித்த 3,987 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில ஹஜ் குழு மூலம் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 மானியத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால், இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தலமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர்.

ரூ.10 கோடி ஒதுக்கீடு: முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் மானியத்தை அரசு வழங்கி வருகிறது. அதற்காக இந்த ஆண்டு தமிழக அரசால் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஹஜ் மானியத் தொகையாக தலா ரூ.25,070-க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நசிமுத்தின், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு.ஆசியா மரியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE